சென்னை: தாம்பரம் அஞ்சல் துறையில் வரும் மே 11ம் தேதி மாவட்ட முகவர்கள் சேர்க்கைக்கான நேரடி நேர்காணல் நடக்கிறது. இதுகுறித்து, தாம்பரம் தலைமை அஞ்சல் கண்காணிப்பாளர் வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் பிரிவு அஞ்சல் துறையில் பி.எல்.ஐ, ஆர்.பி.எல்.ஐ நேரடி முகவர்கள் சேர்க்கைக்கான நேர்காணல், தலைமை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகம், தாம்பரம் அஞ்சலகத்தில் வரும் மே 11ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் தகுதி சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வியை அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முடித்திருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 18 வயது, அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும். வேலையில்லாதவர், சுயதொழில் செய்பவர்கள், இளைஞர்கள், காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்தவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் நேர்காணலுக்கு தகுதியானவர்கள். மேலும், நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தேசிய சேமிப்பு சான்றிதழுக்காக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். உரிமம் சான்றிதழுக்காக ரூ.50 செலுத்த வேண்டும். நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பான் பார்டு, ஆதார் நகல் மற்றும் கல்வி சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.