வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் ஸ்டேட் பாங்க் ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

தஞ்சை, ஏப்.11: ஸ்டேட் பாங்க் ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொது செயலாளர் தாமஸ்பிராங்கோ வலியுறுத்தினார். தஞ்சையில் ஸ்டேட் பாங்க் ஓய்வூதியர் சங்க கூட்டம் நடைபெற்றது. பொது செயலாளரும் முன்னாள் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொது செயலாளருமான தாமஸ்பிராங்கோ தலைமை வகித்தார். இணை செயலாளர் சரவணமுத்து, முன்னாள் பொது செயலாளர் சிங்காரவேலு, பகுதி செயலாளர் பூமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முன்னதாக தாமஸ்பிராங்கோ நிருபர்களிடம் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கினால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு கல்விகடன், விவசாய கடன் உள்ளிட்ட எந்த ஒரு கடனும் வங்கியில் இருந்து வழங்க முடியாத நிலை ஏற்படும். எனவே பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் வாராக்கடனாக ரூ.5.46 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

வாராக்கடனை தள்ளுபடி செய்யாமல் அதனை வசூலிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதே நேரத்தில் பல ஆண்டுகளாக வங்கி பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்படாமல் உள்ளது. 36 ஆண்டுகளாக இதே நிலைமை தான் உள்ளது. இந்த காலகட்டத்தில் சுமார் 1 லட்சம் ஓய்வூதியர்கள் இறந்து உள்ளனர். ஒன்றிய அரசில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் போது ஓய்வூதியமும் அதிகப்படுத்த வேண்டும்.

ஆனால் வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. உடனடியாக ஒன்றிய அரசு ஓய்வூதியத்தை ஒவ்வொரு ஒப்பந்தத்தின்போதும் உயர்த்த வேண்டும். கோரிக்கைகளை நிறைவேறவில்லை என்றால் ஊழியர் சங்கம், அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து போ ராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு தாமஸ் பிராங் கோ தெரிவித்தார்.

Related Stories: