தஞ்சை, ஏப்.11: ஸ்டேட் பாங்க் ஓய்வூதியர் சங்க கூட்டத்தில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொது செயலாளர் தாமஸ்பிராங்கோ வலியுறுத்தினார். தஞ்சையில் ஸ்டேட் பாங்க் ஓய்வூதியர் சங்க கூட்டம் நடைபெற்றது. பொது செயலாளரும் முன்னாள் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொது செயலாளருமான தாமஸ்பிராங்கோ தலைமை வகித்தார். இணை செயலாளர் சரவணமுத்து, முன்னாள் பொது செயலாளர் சிங்காரவேலு, பகுதி செயலாளர் பூமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு முன்னதாக தாமஸ்பிராங்கோ நிருபர்களிடம் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கினால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு கல்விகடன், விவசாய கடன் உள்ளிட்ட எந்த ஒரு கடனும் வங்கியில் இருந்து வழங்க முடியாத நிலை ஏற்படும். எனவே பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது. கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் வாராக்கடனாக ரூ.5.46 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.