சாயல்குடி, மார்ச்.19: முதுகுளத்தூர் அருகே மேலக்கொடுமலூர் குமரன் கோயில் பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. முதுகுளத்தூர் அருகே உள்ள மேலக்கொடுமலூர் குமரன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் அரோகர கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். குமரனுக்கு நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை பால், நெய், இளநீர் உள்ளிட்ட நீர்வகை பொருட்கள், பழங்கள், தானியங்கள் என பலவகை அபிஷேகங்கள், பூஜைகள், தீபாரதனைகள் நடந்தது. ஆயிரம் வருடம் பழமையான உடை மரத்தில் கவட்டை வடிவிலான கம்புகளை நேர்த்தி கடனாக செலுத்தியும், திருமணம் தடை உள்ளவர்கள் மணிகள் கட்டியும், குழந்தைபேறு இல்லாதவர்கள் தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொதுமக்களுக்கு குத்தரிசி மாவு, திணை, கொள்ளு வகை உணவுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி தலைவர் சிவசுப்பிரமணியன், அறக்காவலர் ஆனந்தநடராஜன், நவநீதன், மாணிக்கம் உள்ளிட்ட குருக்கள் செய்திருந்தனர். இதனை போன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சாயல்குடி வழிவிடு முருகன், முதுகுளத்தூர் வழிவிடு முருகன், சுப்ரமணியர் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வள்ளி, தெய்வானை முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. கடலாடி தண்ணீர்பந்தல் முருகன் கோயில், ராஜேஸ்வரி அம்மன் கோயிலுள்ள பாலமுருகன், மாரியூர் வள்ளி, தெய்வானை சமேத முருகன், சாயல்குடி வழிவிடு முருகன் ஆகிய முருகன் கோயில்களில் காலை முதல் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அன்னதானம் நடந்தது.
