சாயல்குடி, மார்ச் 17: கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி பகுதி ஐயப்பன் கோயில்களில் பங்குனி மாத முதல் நாள் பூஜை நேற்று நடந்தது. கேரள மாநிலம் சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாள் நடை திறப்பது வழக்கம். அப்போது அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கும். கடலாடி சார்பதிவாளர் அலுவலகம் அருகிலுள்ள சபரிதோட்டம் ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. குருநாதர் கருப்பையா தலைமையும், சற்குரு மகேந்திரபாண்டியன் முன்னிலையும் வகித்தனர். ஐயப்பனுக்கு சிறப்பு மலர் அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. இதேபோல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள தர்மசாஸ்தா கோயிலில் ஐயப்பனுக்கு நெய், பால், இளநீர் உள்ளிட்ட 11 வகை அபிஷேகம் நடந்தது. பொங்கலிட்டு, பழங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பொங்கல் அன்னதானம் வழங்கப்பட்டது.