புதுக்கோட்டை, மார்ச் 4: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டிஜிட்டல் கதிரியக்க கருவி மற்றும் கணினிமய கதிரியக்க முறை கருவிகளை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கதிரியக்கத் துறையில், ரூ.1 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் கதிரியக்க கருவி மற்றும் ரூ.9.52 லட்சம் மதிப்பீட்டில் கணினிமய கதிரியக்க முறை என்ற புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய கருவிகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இக்கருவிகள் மூலம் குறைந்த செலவில் ஏழை எளிய மக்களுக்கு எக்ஸ்-ரே நிழற்படங்கள் கணினி தொழில் நுட்ப உதவியுடன் விரைவாகவும், தெளிவாகவும் எடுத்து நோயின் தன்மையை விரைவாக கண்டறிய இயலும். மேலும், குறைந்த கதிரியக்கம் அளவில் தெளிவான எக்ஸ்-ரே நிழற்படங்கள் எடுக்க முடியும். மேலும், அதி நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் நிழற்படங்கள் எடுக்க முடியும் என்பதால் நோயின் தன்மையை எளிதாகவும், தெளிவாகவும் கண்டறிந்து உடனுக்குடன் சிகிச்சை வழங்க இயலும்.