தஞ்சை, பிப்.18: தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் உ.வே.சாமிநாதய்யரின் 168வது பிறந்த நாளை முன்னிட்டு “அச்சேறாத தமிழ் ஓலைச்சுவடிகளும் பண்பாடும்” என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் நடைபெற்றது.தமிழ்ப்பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறை மற்றும் கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, அனைத்துலகத் தமிழர் மேம்பாடுப் பேரவை, மலேசியத் தமிழாய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து கருத்தரங்கை நடத்தின. இதில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்து பேசியதாவது:தமிழ்ப் பல்கலைக்கழக சுவடித்துறையின் நோக்கமானது உலகெங்கிலுமுள்ள தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடித் தொகுத்துப் பாதுகாப்பது, பதிப்பிப்பது, வெளியிடுதல் மற்றும் சுவடிகளை மின்படியாக்கி ஆய்வுக்குரிய தரவுகளாக மாற்றப்படுதல் ஆகும். இத்துறையில் தமிழ், கிரந்தம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், பாலி மொழிச் சுவடிகளும், ஆவணச் சுருணைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சேகரிக்கப்பட்ட சுவடிகளை உடனுக்குடன் அட்டவணைப்படுத்தும் முயற்சியில் நான்காயிரம் தமிழ்ச் சுவடிகளுக்கான விளக்க அட்டவணைகளுடன் எட்டுத் தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.