×

திண்டிவனத்தில் துணிகரம் வயதான தம்பதியிடம் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து ₹19 ஆயிரம் அபேஸ்

திண்டிவனம், ஜன. 25: திண்டிவனத்தில் வயதான தம்பதியிடம் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து நூதன முறையில் 19 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திண்டிவனம்  அடுத்த நெய்குப்பி கிராமத்தை சேர்ந்த சாந்தி (56), கிருஷ்ணன் தம்பதி  நேற்று இரு சக்கர வாகனத்தில் நேரு வீதியில் உள்ள தனியார் ஏடிஎம்மில்  பணம் எடுக்க சென்றனர். அவர்களுக்குபணம் எடுக்க  தெரியாததால் அங்கிருந்த ஒரு நபரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம்  எடுத்துத் தரும்படி கூறியுள்ளனர். அப்போது அந்த நபர் பணம் வரவில்லை என  வேறு ஒரு ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

பின்னர்  ஏடிஎம் மையம் உள்ள அதே வங்கியில் செலான் மூலம் பணம் எடுக்க முயற்சி  செய்தனர். அப்போது வங்கி கணக்கில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சி  அடைந்தனர். மேலும் வங்கி கணக்கை சோதனை செய்த போது ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.9 ஆயிரம் என இரண்டு முறை ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கார்டை கொண்டு சென்ற மர்ம ஆசாமி பணம் எடுத்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து சாந்தி திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார்  அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்து, நூதன முறையில் பணம் அபேஸ் மர்ம நபரை தேடி  வருகின்றனர். திண்டிவனத்தில் ஏடிஎம் மையத்தில் ஏடிஎம் கார்டை மாற்றி  கொடுத்து வயதான தம்பதியிடம் 19 ஆயிரம் ரூபாய் அபேஸ் செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tindivanam ,
× RELATED திண்டிவனம் நீதிமன்றத்தில் பரபரப்பு...