தஞ்சை, ஜன.9: இதுவரை ரேஷன் கார்டுகள் பெறாத திருநங்கைகள் ரேஷன் கார்டு பெறுதவதற்கான சிறப்பு முகாம் தஞ்சையில் நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 1,200 திருநங்கைகள் உள்ளனர். இதில் சுமார் 50 பேருக்கு மட்டுமே ரேஷன் கார்டு உள்ளது. இதனால் மற்ற திருநங்கைகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை இருந்து வந்தது. இதையடுத்து தங்களுக்கும் ரேஷன் கார்டுகள் வழங்க வேண்டும் என்று திருநங்கைகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் வட்டத்துக்கு உட்பட்ட திருநங்கைகள் ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் தஞ்சாவூர் மாவட்ட திருநங்கைகளின் ஒருங்கிணைப்பாளர் ராகினி தலைமையில் 30 பேர் தங்களுக்கு ரேஷன் கார்டு வழங்குமாறு அதற்கான விண்ணப்பத்தை, வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜிடம் வழங்கினர்.