திருமயம், ஜன.8: திருமயம் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் பயிர் சேதங்களை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டாரத்தில் தற்போது பெய்து முடிந்த வட கிழக்கு பருவ மழையினால் அறுவடைக்கு தயாரான சம்பா நெல் பாதிக்கப்பட்ட பயிர் சேத விவரங்களை புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் விராச்சிலை, லெட்சுமிபுரம் மற்றும் ஊனையூர் ஆகிய கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமா உடன் இருந்தார். மேற்படி ஆய்வின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளை வேளாண்மை இணை இயக்குநர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, பயிர் அறுவடைக்கு பின்செய் நேர்த்தி தொழில்நுட்பங்கள் குறித்து எடுத்துக்கூறினார்.