புதுக்கோட்டை, ஜன.8: புதுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தை சேர்ந்த 70 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பித்து பொதுமக்களுக்கு அதி தீவிரமாக கொரோனா பரவி வருவதால் தமிழக அரசு இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடக நடிக கலைஞர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் தற்பொழுது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழக அரசு இரவு நேர முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் நாடக நடிகர் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என்று கூறி புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தில் உள்ள கலைஞர்கள் அனைவரும் பல்வேறு வேடமணிந்து நாடக நடிகர் சங்கத்தில் இருந்து ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையம் அருகே பழைய அரசு தலைமை மருத்துவமனை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.