கும்பகோணம், டிச.31: கும்பகோணம் ரயில் நிலைய வளாகத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே போர்டு பயணிகள் வசதிகள் மேம்பாட்டு குழு உறுப்பினர் தெரிவித்தார். ரயில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்திடவும், கண்காணிக்கவும் ரயில்வே வாரியம் 25 பேர் கொண்ட ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டு குழுவை அமைத்துள்ளது. இக்குழுவை சேர்ந்த ஐதராபாத்தை சேர்ந்த உமாராணி, மேற்கு வங்காளத்தை சேர்ந்த அபிஷேக்தாஸ், கர்நாடகாவை சேர்ந்த மஞ்சுநாத் ஆகியோர் குழுவை சேர்ந்த ரவிச்சந்திரன் தலைமையில், தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு தினங்களுக்கு முன்பு மன்னார்குடி மற்றும் திருவாரூர் ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட இக்குழுவினர் நேற்றுமுன்தினம் சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய ரயில் நிலையங்களில் ஆய்வுக்கு பின்னர் அன்று மாலை இக்குழுவினர், கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்து, அங்கிருந்த குடிநீர் வசதிகள், உணவகம், இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கத்தினரிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றனர்.