ஒட்டன்சத்திரம், டிச.9: ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் தலைக்காயம் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ரூ.4.30 கோடி செலவில் அமைய உள்ளது. அதற்கான இடத்தினை உணவு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் நம்பிக்கை மையத்தை தேசிய அளவில் சிறந்த நம்பிக்கை மையமாக தேசிய எய்ட்ஸ் சங்கம் மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து ஐந்து நட்சத்திர விருதுக்கு தேர்வு செய்தது. அந்த விருதுக்கான சான்றிதழை மருத்துவர்கள் அமைச்சரிடம் காண்பித்தனர். இதனையடுத்து பக்கவாதம், விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்து, அதற்கான கையேடுகளின் பிரதிகளை பொதுமக்களிடம் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில் தேசிய நலவாரிய ஒருங்கிணைப்பாளர் மருதுதுரை, இணை இயக்குனர் பாக்கியலட்சுமி, தலைமை மருத்துவர் தமிழ்செல்வி, அரசு மருத்துவர்கள் சதீஸ்குமார், சிவசெல்வி, ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பொன்ராஜ், ஒன்றிய செயலாளர் தர்மராஜ், ஊராட்சிமன்ற தலைவர் முருகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.