நித்திரவிளை, டிச.6:கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெங்கானூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 12ம் தேதி பள்ளி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக மாணவியின் தாய் திருவல்லம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து சிறுமி மாயம் என்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து தேனி மாவட்டம் கம்பம், சென்னை உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கலிங்கராஜபுரம் பந்தடிகளத்தில் ஷிபு என்பவரின் வீட்டில் சிறுமி இருப்பதாக கேரள போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நித்திரவிளை போலீஸ் உதவியுடன் சிறுமியை கேரள போலீசார் மீட்டனர்.
இதேபோல் கோழியூர் காலனி பகுதியை சேர்ந்த மாணவியின் காதலன் பிரகாஷ் (23) என்ற வாலிபரையும் பிடித்து நித்திரவிளை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது ஷிபுவின் உறவினர்தான் பிரகாஷ் என்பது தெரியவந்தது. இறந்து போவேன் என்று பிரகாஷ் கூறியதால் வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாக ஷிபு கூறினார். இது தொடர்பாக கேரள போலீசார் கூறியதாவது: திருவல்லம், கோவளம் ஆகிய காவல் நிலையங்களில் கஞ்சா, அடிதடி உள்பட 18 வழக்குகள் பிரகாஷ் மீது உள்ளது. இதே மாணவியை 2 வருடத்திற்கு முன்பு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக திருவல்லம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பிரகாஷின் தாயார் மீது தக்கலை காவல் நிலையத்தில் பெண் ஒருவரை கடத்தி சென்று நகைக்காக கொலை செய்த வழக்கு உள்ளது ,மாணவிக்கு 18 வயது பூர்த்தியடைய இன்னும் 4 மாதங்கள் உள்ளதாகவும் போலீசார் கூறினர். தொடர்ந்து கேரளாவில் இருந்து மகளிர் போலீசார் வரவழைக்கப்பட்டு காதலர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.