பொட்டல்புதூரில் இருளில் மூழ்கி கிடக்கும் ஏடிஎம் வாடிக்கையாளர்கள் அவதி

கடையம், ஏப். 15:  பொட்டல்புதூரில் இரவில் இருளில் மூழ்கிக்கிடக்கும் ஏடிஎம்மால் மக்கள் அவதிப்படுகின்றனர். கடையம் ஒன்றியம், பொட்டல்புதூரில் கடையம் - அம்பை நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம்மை பொட்டல்புதூர் மற்றும் சுற்று வட்டார மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏடிஎம் மையத்தில் கடந்த ஒருமாதமாக பழுதாகி கிடக்கும்  மின்விளக்குகளால் இரவில் ஏடிஎம் இருளில் மூழ்கிக் கிடக்கும் அவலம் தொடர்கிறது. இதனால் இங்கு வரும் வாடிக்கையாளர்கள், செல்போன் ஒளியையும், டார்ச் விளக்கையும் பயன்படுத்தி தட்டுத்தடுமாறி பணம் எடுத்துசெல்ல வேண்டியுள்ளது. இதனால் அனைத்துத்தரப்பினரும் பெரிதும் அவதிப்படுகின்றனர். அத்துடன் இம்மையம் எப்போதும் திறந்தேகிடப்பதால் கால்நடைகளின் கூடாரமாக மாறுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் இனியாவது இதுவிஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: