புதுச்சேரி, ஏப். 13: ஜிப்மர் டாக்டர் வீட்டில் நகை திருட்டு சம்பவம் தொடர்பாக கோரிமேட்டைச் சேர்ந்த 4 பேரிடம் சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி கோரிமேடு பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (41). ஜிப்மர் டாக்டரான இவர், தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க சில தினங்களுக்கு முன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பிய நிலையில் பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்தார்.அப்போது 26 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி கோரிமேடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். எஸ்ஐ கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.