ஜிப்மர் டாக்டர் வீட்டில் திருட்டு 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

புதுச்சேரி, ஏப். 13: ஜிப்மர் டாக்டர் வீட்டில் நகை திருட்டு சம்பவம் தொடர்பாக கோரிமேட்டைச் சேர்ந்த 4 பேரிடம் சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  புதுச்சேரி கோரிமேடு பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (41). ஜிப்மர் டாக்டரான இவர், தனது உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்க சில தினங்களுக்கு முன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பிய நிலையில் பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்தார்.அப்போது 26 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி கோரிமேடு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். எஸ்ஐ கோவிந்தராஜ் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

அவரது வீட்டில் உள்ளவர்கள் வழக்கமாக கதவை பூட்டிவிட்டு அதன் சாவியை அங்குள்ள ஒரு ஷூவிற்குள் மறைத்து வைத்துவிட்டு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்றும் அவர்கள் வீட்டை பூட்டி சாவியை வழக்கமான இடத்தில் வைத்துவிட்டு சென்ற நிலையில், யாரோ மர்ம நபர் இதை நோட்டமிட்டு சாவியை எடுத்து வீட்டை திறந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.இது தொடர்பாக பாலசுப்பிரமணியனின் வீட்டை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் 4, 5 பேரை சந்தேகத்தின்பேரில் தனிப்படை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் சம்பவத்தன்று அப்பகுதியில் நடமாடியவர்களை கண்டறிய செல்போன் நம்பர் டவர் பரிசோதனையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

Related Stories: