புதுச்சேரி, ஏப். 10: புதுச்சேரி, நெட்டப்பாக்கம் அரசு பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியை மீது செங்கல்லை வீசிய சஸ்பெண்ட் முன்னாள் மாணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒழுங்கீனமாக செயல்பட்ட மாணவர்களில் சிலர் சமீபத்தில் அங்கிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே தேர்தல் முடிந்து 8ம்தேதி முதல் புதுச்சேரியில் பிளஸ்2 வகுப்புகள் மீண்டும் ஆரம்பமானது. இப்பள்ளியில் ஆசிரியை ஆன்மரி மார்ஸ் பிளஸ்2 மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது வகுப்பறை வாசலில் நின்றிருந்த முன்னாள் மாணவரில் ஒருவர், தான் கையில் வைத்திருந்த செங்கல்லை எடுத்து ஆசிரியை மீது வீசியுள்ளார். இதைப் பார்த்து சுதாரித்துக் கொண்ட ஆசிரியை சற்று விலகிய நிலையில் வலது பக்க விலாவில் தாக்கி மயக்கமடைந்தார். உடனே அவர் நெட்டப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுதொடர்பாக ஆசிரியை அளித்த புகாரின்பேரில் நெட்டபாக்கம் எஸ்ஐ ராஜேஷ் தலைமையிலான போலீசார் 332 பிரிவின்கீழ் அடையாளம் தெரியாத மாணவர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியை மீது செங்கல்லை வீசியது சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் மாணவர்களில் ஒருவரான ஏரிப்பாக்கம் பிரகாஷ்ராஜ் (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவையில் புதிதாக 223 பேருக்கு கொரோனா புதுச்சேரி, ஏப். 10: புதுவையில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று புதிதாக 223 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 1,550 (74.37 சதவீதம்) பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுச்சேரி மாநிலத்தில் 3,751 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 158, காரைக்கால் - 46, ஏனாம் - 10, மாகே - 9 பேர் என மொத்தம் 223 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதுமில்லை. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 43,465 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜிப்மரில் 157 பேரும், இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 296 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் 1,550 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சுகாதார பணியாளர்கள் 28,486 பேர் (63 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 16,309 பேர் (51 நாட்கள்), பொதுமக்கள் 42,253 பேர் (35 நாட்கள்) என மொத்தம் 87,048 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.