தேர்தல் விதிமீறிய அதிமுக எம்எல்ஏ., மீது நடவடிக்கை

கிருஷ்ணகிரி, ஏப்.10:  தேர்தல் விதிமீறிய அதிமுக எம்எல்ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்குட்டுவன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். பர்கூர் அடுத்த எமக்கல்நத்தம் கிராமத்தில், கடந்த 6ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது கள்ள ஓட்டு போடுவதாக எழுந்த புகாரின் போது, அதிமுக மற்றும் திமுகவினர்  இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரனை, திமுகவினர் தாக்கியதாக அவரது  ஆதரவாளர்கள், திமுக ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் உள்ளிட்டோரின் வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.

அத்துடன் இதுகுறித்து அதிமுக எம்எல்ஏ., ராஜேந்திரன், பர்கூர் போலீசில் புகார் அளித்தார். ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து,  ஒருவரை கைதும் செய்தனர். இந்நிலையில் நேற்று எமக்கல்நத்தம் சென்ற, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., அதிமுகவினர் அடித்து உடைத்த வீடுகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எமக்கல்நத்தம் வாக்குச்சாவடிக்கு, தேர்தல் தினத்தன்று, தேர்தல் விதிமீறி கட்சி கொடியுடன் பர்கூர் எம்எல்ஏ ராஜேந்திரன் சென்று, வாக்குச்சாவடியின் கதவை மூடி, திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக எவ்வித முகாந்திரமும் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெறாமல் தடுத்துள்ளார். இதனால் 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது ஆதரவாளர்கள், சுமார் 200க்கும் அதிகமானோர், திமுக ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோரின் வீடுகளின் ஜன்னல் கண்ணாடி கதவுகளை அடித்து நொறுக்கியதுடன், 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து திமுக சார்பில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக எம்எல்ஏ., ராஜேந்திரன் புகாரை பெற்று, வழக்குபதிவு செய்து, திமுகவினர் மீது கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, ஒருதலைப்பட்சமாக காவல்துறை செயல்படுவதை கண்டிப்பதுடன், அதிமுக எம்எல்ஏ., ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். அப்போது அவருடன் மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related Stories: