வருசநாடு, ஏப். 3: மயிலாடும்பாறை அருகே, சுகாதாரமற்ற கிணற்றில் இருந்து நீரை இரைத்து குடிப்பதால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மயிலாடும்பாறை அருகே, மந்திசுனை மூலக்கடை ஊராட்சியில் சிறப்பாறை கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு மயிலாடும்பாறை மூலவைகை ஆற்றில் உறைகிணறு அமைத்து, கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதற்காக சிறப்பாறை கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், சிறப்பாறை கிராமம், மூல வைகை ஆற்றில் இருந்து உயரமாக அமைந்துள்ளதால் மேல்நிலை, குடிநீர் தொட்டியில் நீர் நிரப்ப முடியவில்லை. அவ்வாறு நீர்நிரப்பினாலும் அது மக்களுக்குப் போதுமானதாக இல்லை. இது தொடர்பாக கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொதுமக்கள் கூட்டுக் குடிநீர் குழாயில் வரும் நீரை மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு பதிலாக கிராம பொது கிணற்றில் தேக்கி வைத்து, அதிலிருந்து கயிறு மூலம் இறைத்து அதனை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.