சென்னை: விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, கலைஞர் நகர் தெற்கு பகுதி 138 ‘அ’ வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, அவருக்கு பொக்லைன் இயந்திரம் மூலம் பூக்களை கொட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், பிரம்மாண்ட யானை இயந்திரம் வைத்தும் வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது வேட்பாளர் பிரபாகர்ராஜா பேசுகையில், ‘அம்பேத்கர் காலனியில் ஏழை எளிய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும். பாரதிதாசன் காலனி பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படும். பழுதடைந்த மின் கம்பங்கள் சரி செய்யப்படும். கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும். உங்களை தேடி உங்கள் நண்பன் என்ற பெயரில் தெருக்கள் தோறும் குறைதீர் முகாம்கள் நடத்தி மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும்.