திருவாரூர், மார்ச் 29: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 4 ஆசிரியர்கள் உட்பட புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2வது கட்டமாக கொரோனா தொற்று என்பது கடந்த 15 நாட்களுக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்திலும் 15 தினங்களுக்கு முன்னர் வரையில் 15 எண்ணிக்கையில் இருந்துவந்த தொற்று தற்போது 30, 40 என அதிகரித்து நேற்று 50ஆக ஆனது. அதன்படி திருவாரூரில் தனியார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 3 ஆசிரியர்கள், பனங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் உட்பட திருவாரூர் நகரம் மற்றும் ஊரக பகுதிகளில் மொத்தம் 18 பேரும், மன்னார்குடியில் 3 பேரும், திருத்துறைபூண்டியில் 6 பேரும், நீடாமங்கலம் மற்றும் நன்னிலத்தில் தலா 4 பேரும் மற்றும் குடவாசலில் 3 பேர் என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது.