புழல்: மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் சோழவரம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு வழிநெடுகிலும் ஏராளமானோர் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பல கிராமங்களில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை சுதர்சனத்திடம் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்டு அவர் பேசுகையில், ‘இந்த பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலையில்லாமல் உள்ள பெண்களுக்கு விரைவில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இளைஞர்களுக்கு விளையாடுவதற்கு இடங்கள் தேர்வு செய்து, விளையாட்டு உபகரணங்களை வழங்கப்படும்.
பராமரிப்பு இல்லாத ஊராட்சி குளங்கள் தூர்வாரப்பட்டு, தடுப்பு சுவர்கள் அமைக்கப்படும். திமுக ஆட்சி அமைந்ததும் இந்த பகுதியில் அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்து, குடிநீர், மின்விளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் நிறைவேற்றுவேன். மேலும், சமுதாயக்கூடம், முக்கிய சந்திப்புகளில் பொது கழிப்பறை கட்டித் தரப்படும். குறிப்பாக, சோழவரம் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தரப்படும்’ என்றார். சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கருணாகரன் மற்றும் திமுக ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.