வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை: எஸ்.சுதர்சனம் வாக்குறுதி

புழல்: சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாதவரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான எஸ்.சுதர்சனம் சோழவரம் தெற்கு ஒன்றியம் நெற்குன்றம், சோத்துபெரும்பேடு, காரனோடை ஆகிய ஊராட்சிகளில்  நேற்று திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் பேசுகையில்,“நெற்குன்றம், சோத்துபெரும்பேடு, காரனோடை ஆகிய 3 ஊராட்சிகளில் உள்ள ஆறு அரசு பள்ளிகளூக்கு சுற்றுச்சுவர் கட்டி தந்துள்ளேன்.  அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், நெற்குன்றம் பகுதியில் கலையரங்கம் அமைக்கப்பட்டது. இந்த ஊராட்சிக்குட்பட்ட  2 அரசு பள்ளி வளாகத்தில் புதிதாக சத்துணவு கூடம் கட்டப்பட்டது. இதுபோன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளேன். சட்டசபை நடைபெறும் நாட்களில் அனைத்து நாட்களிலும் சென்று மக்களின் பிரச்னைகளை குறித்து கேள்வி எழுப்பி, பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளேன்.

வருங்காலங்களில் மேற்கண்ட கிராமங்களில், வசிக்கும்  மக்கள் பயன்பெறும் வகையில் தரமான சமுதாயக்கூடம், மழைநீர் கால்வாய்கள், மற்றும் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு உடனடியாக வீட்டு மனை பட்டா வழங்கப்படும். அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். சென்னைக்கு செல்வதற்கு கூடுதலாக மாநகர பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும்.’’ இவ்வாறு அவர் பேசினார். இதில், சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கருணாகரன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

Related Stories: