சிவகங்கை, மார்ச் 23: சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்களின் இறுதி பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் ஏப்.6ல் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 12 முதல் மார்ச் 19 வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குணசேகரன், அதிமுக சார்பில் செந்தில்நாதன், அமமுக சார்பில் அன்பரசன், மநீம கூட்டணியில் சமக சார்பில் நேசம் ஜோசப், நாதக சார்பில் மல்லிகா மற்றும் மாற்று வேட்பாளர்கள் உள்பட 26பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில் ஆறு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 20 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டது. மனு வாபஸ் வாங்க நேற்று கடைசி நாள் ஆகும். நேற்று மாற்று வேட்பாளர்கள் உட்பட 5 பேர் தங்கள் மனுவை வாபஸ் பெற்றனர்.