தஞ்சை, மார்ச் 20: தஞ்சை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பிக்கு ஆதரவாக நேற்று தஞ்சையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தஞ்சை சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கரந்தை பகுதி செயலாளர் அறிவுடைநம்பி மாநகரின் பல்வேறு பகுதிகளில்வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை தஞ்சை மாநகரின் முதல் வார்டான பள்ளிஅக்ரகாரத்தில் உள்ள காளியம்மன்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து பிரசாரத்தை தொடங்கினார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கம் சட்டமன்ற வேட்பாளர் அறிவுடைநம்பிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து திறந்த ஜீப்பில் எம்.பி.வைத்திலிங்கம், வேட்பாளர் அறிவுடைநம்பி ஆகியோர் வீதி வீதியாக வாக்கு சேகரித்தனர்.