சிவகங்கை, மார்ச் 19: சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சிகளில் மோட்டார் வாங்கியதில் முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க உயர்நிலை அலுவலர்கள் கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் இரண்டு நாட்கள் ஆய்வு நடத்தினர். இதில் சிவகங்கை, தேவகோட்டை, திருப்புத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மின் மோட்டார்கள், குளோரின் மாத்திரைகள் கொள்முதல் செய்ததில் ஊழல் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்ட செயல்முறைகளும், வட்டார வளர்ச்சி அலுவலர்களால் நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளிகளும் ஒரே தேதியில் இருந்தது எப்படி என ஆய்வறிக்கையில் கேட்கப்பட்டது. நீர்மூழ்கி மோட்டார்கள் ஒன்றிய பொதுநிதியிலிருந்து அதிக எண்ணிக்கையில், பல மடங்கு கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 73 மோட்டார்கள் ரூ.28 லட்சத்து 18 ஆயிரத்து 634க்கும், உதிரிபாகங்கள் ரூ.15 லட்சத்து 26 ஆயிரத்து 40க்கும், சிவகங்கையில் 86 மோட்டார்கள் ரூ.26 லட்சத்து 89 ஆயிரத்து 779க்கும், தேவகோட்டையில் 106 மோட்டார்கள் ரூ.37 லட்சத்து 10 ஆயிரத்து 932க்கும், உதிரிபாகங்கள் ரூ.14 லட்சத்து 71 ஆயிரத்து 680க்கும் கொள்முதல் செய்ததாக ஆவணத்தில் உள்ளது.