புதுடெல்லி: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யா அருகே கருங்கடல் பகுதியில் கடந்த 18ம் தேதி எம்.வி.ஓமோர்பி சரக்கு கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், இந்திய மாலுமி ஒருவர் பலியானார். மற்ற 2 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக, டெல்லியில் உள்ள உக்ரைன் தூதர் ஒலேக்சாண்டர் போலிஸ்சக்கிற்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. அவரை நேரில் அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தீவிர கவலையை வெளியுறவுத்துறை தெரிவித்ததுடன், கப்பல்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் கடல்சார் பாதுகாப்பு, சுதந்திரமான கடல் போக்குவரத்து மற்றும் சர்வதேச வர்த்தகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக வலியுறுத்தியது. அப்பாவி மாலுமிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் தெரிவித்தது.
