வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பஸ்நிலையம் அருகில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் போதை ஆசாமிகள் 2 பேர் ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கால்வாயில் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது. இதனை ஒரு ஆட்டோ டிரைவர் தட்டிக்கேட்டாராம். இதனால் 2 போதை ஆசாமிகளும் ஆட்டோ டிரைவரிடம் தகராறு செய்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்த சென்ற 2 போதை ஆசாமிகள் 10 மணியளவில் மேலும் ஒருவருடன் போதையில் ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் அங்கு இல்லாததால், நீண்ட நேரமாக காத்திருந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறிய 3 பேரும் சேர்ந்து பெட்ரோல் குண்டு தயாரித்து கொளுத்தி ஆட்டோ ஸ்டாண்டு மீது வீசியுள்ளனர். ஆனால் அந்த பெட்ரோல் குண்டு அங்கிருந்த சுவற்றில் விழுந்து வெடித்து சிதறி பற்றி எரிந்தது. இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
