சேலம்: சேலத்தில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பெண்களிடம் உல்லாசமாக இருந்த புகாரில் கைதான தவெக பிரமுகர் சிறையில் இருந்து வெளியே வந்து ஒரேவாரத்தில் மீண்டும் பாலியல் புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் கொண்டலாம்பட்டி சின்னபுத்தூர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (39). தவெக பிரமுகரான இவர், மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவர் பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து உல்லாசமாக இருந்ததாகவும், அதை வைத்து மிரட்டி பலருக்கு பெண்களை சப்ளை செய்வதாகவும் பெண் ஒருவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். மேலும் மணிகண்டனின் செல்போனில் 8 ஆயிரம் ஆபாச படங்கள் இருப்பதாகவும் கூறினார். இதையடுத்து கொண்டலாம்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர். பொள்ளாச்சியில் நடந்ததுபோல சேலத்திலும் நடந்து விட்டதாக கூறிய அரசியல் கட்சி தலைவர்கள், இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் மணிகண்டனிடம் இருந்து செல்போன், பென்டிரைவ் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் 3 பெண்களின் ஆபாச படங்கள் மட்டுமே இருப்பதாக தெரிவித்தனர். மேலும் பறிமுதல் செய்த பென்டிரைவ், செல்போன் ஆகியவற்றை ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைத்தனர். அந்த முடிவுகள் இன்னும் வரவில்லை. இதற்கிடையில் கடந்த 16ம் தேதி, மணிகண்டன் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். இவர் மீது, பள்ளப்பட்டியை சேர்ந்த 27 வயது இளம்பெண், என்னை நிர்வாணமாக படம் எடுத்து வைத்து கொண்டு மிரட்டுவதாகவும், கணவரை விட்டுவிட்டு தன்னுடன் வருமாறு அழைப்பதாகவும் கண்ணீருடன் புகார் கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். இவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பல்வேறு மர்மங்கள் புதைந்து கிடப்பதாக போலீசார் தெரிவித்தனர். மணிகண்டனிடம் இளம்பெண் பல லட்சம் கடன் பெற்றிருந்ததாகவும், இதனை கேட்டு மணிகண்டன் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. அந்நேரத்தில் அந்த இளம்பெண்ணின் வீட்டில் மேலும் 3 பேர் இருந்துள்ளனர். அவர்கள் யார்? எதற்காக அங்கிருந்தார்கள் என்பதை தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்த வேகத்தில் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்திருந்தாரா? என்ற கேள்வி போலீசார் முன்பு இருக்கிறது.
மணிகண்டனிடம் இருக்கும் பணத்தை பறிக்க ஒரு சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால் நடந்த உண்மை அனைத்தையும் தெரிந்துள்ள போலீசார், உண்மையை தெரிவிக்காத மர்மம் என்ன என்பது தான் தெரியவில்லை. பெண் கொடுத்த புகாரில் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகிறோம் என்பதை மட்டுமே போலீசார் தெரிவித்தனர்.
