சென்னை: மயிலாப்பூர் திமுக வேட்பாளர் மயிலை த.வேலு, 124 ‘அ’ வட்டத்தில் நேற்று காலை வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். சென்னை மயிலாப்பூர் தொகுதியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக மயிலை த.வேலு போட்டியிடுகிறார். அவர் நேற்று காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முதற்கட்டமாக தன்னித்துறை மார்க்கெட் பகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அப்பகுதியில் உள்ள மக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும்படி பிரசாரம் மேற்கொண்டார். அதை தொடர்ந்து கணேசபுரம், பிருந்தாவனம் தெரு, வீர பெருமாள் கோயில் தெரு, அப்பர்சாமி கோயில் தெரு, சிதம்பரசாமி கோயில் தெரு 1, 2, 3 மற்றும் பாலசுப்பிரமணியம் தெரு, திருவீதி அம்மன் கோயில் தெரு, பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அறிவிப்புகள் குறித்து கூறி வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.