சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட 17 புகார்களின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் பிரிவு மாநில இணைச் செயலாளர் ஜி.சந்திரபோஷ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மே முதல் வரை ஜூன் வரையிலான குறுகிய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறது.
கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான நபர் திமுகவை சேர்ந்தவர் என்று அவதூறு பரப்பப்பட்டுள்ளது. அதேபோல முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக மீது அவதூறு கருத்துகளை தொடர்ந்து பரப்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஏ.ஐ மூலம் தவறாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை பரப்புகிறார்கள்.
பிரபல செய்தி தொலைக்காட்சிகளின் வெப் கார்டுகள் போல போலி கார்டுகள் உருவாக்கப்பட்டு திமுக மீது அவதூறு பரப்பப்படுகிறது. தவெகவுக்கு ஆதரவாக செயல்படும் சமூக வலைதளங்களுக்கு எதிராக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் 17 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த புகார்கள் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
