திருமலை: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் நேற்று திருமலையில் நடந்தது.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.10 லட்சம் நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 3 முறை குடும்பத்தில் 5 பேர் வி.ஐ.பி. தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் ரூ.10 லட்சம் நன்கொடை அளிக்கும் நன்கொடையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை ரூ.10 லட்சம் நன்கொடை அளித்த பக்தர்கள் எண்ணிக்கை 22 ஆயிரமாக உள்ளது. அவர்களுக்கு மட்டும் பழைய நடைமுறையின்படி தரிசனம் செய்து வைக்கப்படும்.
புதிய நடைமுறையின்படி நேற்று நள்ளிரவு முதல் ரூ.10 லட்சம் நன்கொடை அளிப்பவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் குடும்பத்தில் 5 பேர் வி.ஐ.பி. தரிசனத்தில் அனுமதிக்கப்படும். இதேபோன்று அதற்கு மேல் நன்கொடை அளிப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
