பேராவூரணி, மார்ச் 13: பேராவூரணி கடைவீதியில் தொடர் திருட்டு நடந்து வருவதால் வியாபாரிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.பேராவூரணி கடைவீதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. பட்டுக்கோட்டை சாலை, முதன்மை சாலை, சேதுசாலை, ஆவணம் சாலை என நான்கு திசைகளிலும் மளிகைக் கடைகள், நகைக் கடைகள், ஜவுளி கடைகள், நகை அடகு கடைகள், அரசு, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக மர்ம நபர்கள் கடைவீதியில் பூட்டை உடைத்து கதவை திறந்து பணம், பொருட்களை திருடிச் செல்கின்றனர். காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் காவலர் பற்றாக்குறை, குற்றப்பிரிவு போலீசார் இல்லாத காரணத்தால் திருடர்களை பிடிக்க முடியவில்லை. ஆனால் தொடர் திருட்டு நடைபெறுவதால், வியாபாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த வாரத்தில் ஆவணம் முக்கத்தில் உள்ள பிரபல மெடிக்கல் கடையில் பூட்டை உடைத்து திருட்டு நடந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை சேது சாலையில் உள்ள ஒரு மளிகை கடையிலும், மெடிக்கல் கடையிலும் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளது.