தியாகராஜ நகர், ஜூலை 9: நெல்லையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உள் மாவட்ட அளவிலான இடமாறுதல் கலந்தாய்வு நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் நடப்பு கல்வி ஆண்டிற்காக தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள் மாவட்ட அளவில் இடமாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நேற்று நடத்தப்பட்டது. அந்தவகையில் நெல்லை மாவட்டத்திற்கான இந்த கலந்தாய்வு பாளை கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்து கலந்தாய்வை நடத்தினார்.
