சமயபுரம், ஜூலை 6: நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி ஊராட்சியைச் சேர்ந்தவர் இளவரசன். ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக இவர் வளர்த்து வரும் ஆடுகள் தொடர்ந்து திருட்டு போனது. இதுகுறித்து அவர் கொள்ளிடம் போலீசில் பலமுறை புகார் அளித்திருந்தார். இளவரசன் வீடு மட்டுமன்றி, தாளக்குடி, கீரமங்கலம், பிச்சாண்டார்கோவில், பள்ளிவாசல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஆடுகள் திருடப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். இதுகுறித்தும் கொள்ளிடம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்ட வண்ணம் இருந்தன.
இந்நிலையில், நேற்று அப்பகுதியில் மீண்டும் ஆடு திருட முயன்ற 4 நபர்களை பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு கையும் களவுமாகப் பிடித்தனர். விசாரணையில் திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த அஜித் (19), நவீன் (21). இவர்களுடன் ஆடு திருட்டில் ஈடுபட்ட மேலும் இரண்டு நபர்கள் சிறுவர்கள் (சிறார்கள்) என்பது தெரியவந்தது. இப்பகுதிகளில் நடந்த தொடர் ஆடு திருட்டு சம்பவங்களில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, 4 பேரையும ்கைது செய்து சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியிலும், அஜித், நவீனை மத்திய சிறையில் அடைத்தனர்.
