திருச்சி, ஜூலை 3: திருச்சி மாநகரில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாநகரில் புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக மாநகர போலீசாருக்கு கடந்த 1ம் தேதி தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை வேட்டை நடத்தினர். இதில், திருச்சி கோரையாறு அருகே புகையிலை விற்ற திருச்சி பெரிய மிளகுபாறை புதுத் தெருவை சேர்ந்த மனோகரன் (42) என்பவரை கன்டோன்மென்ட் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி குட்டிமலை சாலை அருகே புகையிலை விற்ற கிராப்பட்டி பாரதிநகரை சேர்ந்த ஆறுமுககனி (39) என்பவரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோன்று பொன்மலை அஞ்சல் அலுவலக சாலை அருகே புகையிலைப் பொருட்கள் விற்ற பொன்மலைப்பட்டி மலையடிவாரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (24) என்ற வாலிபரை பொன்மலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
