திண்டுக்கல், ஜூலை 6: திண்டுக்கல் மாவட்டத்தின் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் டூவீலர்கள் ஓட்டுவது தொடர்கிறது. இதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுவர்கள் டூவீலர் மற்றும் வாகனம் இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதை தடுக்கும் விதமாக தமிழக அரசு கடுமைன சட்டங்கள் இயற்றியுள்ளது. சிறுவர்கள் வாகனம் இயக்குவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 25 வயது வரையிலும் லைசென்ஸ் கொடுக்கப்பட மாட்டாது என்று உத்தரவு பிறபித்துள்ளது. இருப்பினும் அதிகளவில் சிறுவர்கள் டூவீலர் ஓட்டுவதை பார்க்க முடிகிறது.
இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் வீண் பிரச்னைகளும் நடக்கிறது. போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக் கூடம் விடும் நேரங்களில் டூவீலரில் வேகமாக சென்றபடி மாணவிகளை கேலி, கிண்டல் செய்கின்றனர். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டூவீலர் கொடுப்பதை நிறுத்த வேண்டும். குறிப்பிட்ட வயது வந்தவுடன் டூவீலர் ஓட்ட அனுமதிக்க வேண்டும். சிறுவர்கள் ஓட்டும் வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும். பெற்றோர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் டூவீலரில் சிறுவர்கள் குற்ற சம்பவங்களிலும் ஈடுபடுவதாக தெரிகிறது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
