ரெட்டியார்சத்திரம், ஜூலை 6: தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், புகைப்படக் கண்காட்சியானது மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கன்னிவாடி முதல்நிலை பேரூராட்சிப் பகுதியில் இந்த கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் புதிய திட்டங்களான, இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுகள் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம், சிறு, குறு, நடுத்தர விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், விவசாயக் கடன் தள்ளுபடி திட்டம், பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களது புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் தொடங்கப்பட்டுள்ள சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை போன்றவை குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இவற்றுடன் தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்து, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் 65 போதைப் பொருட்கள் தடுப்புப் படை அமைப்பு குறித்தும், இக்கண்காட்சியில் விளக்கப்படங்கள் இடம்பெற்றன.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் ஆய்வுக் கூட்டங்கள்ள் தொடர்பான புகைப்படங்களும், இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.
