×

குடிநீர் விநியோகம் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீர் மறியல்: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

 

இடைப்பாடி, ஜூலை 6: இடைப்பாடி அருகே கிழக்கு கால்வாய் பாலத்தின் முன்பு, 2 மாதங்களாக குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து, காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த காவேரிப்பட்டி ஊராட்சி காந்திநகர் பகுதியில், ஆழ்துளை கிணற்றின் மூலம் தண்ணீர் எடுத்து காந்தி நகர், மோட்டூர், ஆயமரத்துகாடு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் சுமார் 200 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த இரு மாதத்திற்கு மேலாக ஆழ்துளை கிணற்றின் மின்மோட்டார் பழுதானதால் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் இல்லாததால் கிராம மக்கள் சுமார் 4 கி.மீ., தூரம் சென்று தண்ணீர் பிடித்து வந்து சிரமப்பட்டனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை காந்தி நகர் கால்வாய் பாலம் பகுதியில், காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காலி குடங்கள் மற்றும் குழந்தைகளுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போதிலும், அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் வேதனையுடன் வீடுகளுக்கு திரும்பி சென்றனர்.

Tags : Idappadi ,East Canal Bridge ,Salem district ,Cauverypatti Panchayat… ,
× RELATED டாஸ்மாக் மீது பெட்ரோல்...