உள்ளாட்சி தேர்தல் சீட் ஒதுக்கீடு தோழமை கட்சிகளுடன் பேச்சு: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அருகே பாரியூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் குடியிருக்கும் நபர்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து, நத்தம் புறம்போக்கு மற்றும் இதர இடங்களில் குடியிருப்பவர்கள் பற்றிய ஆய்வுப் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். கொடநாடு என்பது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இடமாகும். அங்கு நடைபெற்ற சம்பவங்கள் குறித்த வழக்கு தொடர்பாக முதல்வர் விஜய்தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு அனிதா ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் வந்துதான் அந்த இயக்கத்தையோ, ஆட்சியையோ காப்பாற்ற வேண்டும் என்ற நிலை இல்லை. உள்ளாட்சித் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்த தோழமைக் கட்சிகள் போட்டியிடுவது குறித்து நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அனைவரும் மனம் விட்டுப் பேசினர். அந்தக் கருத்துகளைத் தற்போது வெளியில் அறிவிக்க இயலாது. காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரிய முடிவுகள் எடுக்கப்பட்டு முறைப்படி அறிவிக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Related Stories: