வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய வைத்தியங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உடல் உஷ்ணத்தை குறைக்க

பருக்கள், இளநரை, முடி உதிர்வது, வயிற்றில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரப்பது, தொண்டைவறட்சி, தோலில் அரிப்பு, நெஞ்செரிச்சல், வாய்ப்புண் இதுபோன்ற பொதுவான பிரச்னைகளுக்கு காரணம், உடல் உஷ்ணம், எத்தனைதான் லோஷன்கள், கிரீம்களை தேய்த்தாலும், உடல் உஷ்ணத்தை குறைக்காவிட்டால் பிரச்னைகள் தீராது.

உஷ்ணத்தை குறைப்பதற்கான சில ஆலோசனைகள். ஹைட்ரோ தெரபி – ஐஸ் துண்டுகள், சில துளிகள் பன்னீர் சேர்த்த நீரில், 10 நிமிடங்கள் பாதங்களை வைத்து, மசாஜ் செய்ய வேண்டும். உடல் வெப்பம் குறைந்து, நரம்புகள் தூண்டப்பட்டு பதற்றம் குறையும்.

ஜலதோஷத்துக்கு

ஜலதோஷம், சளி, தொண்டைவறட்சி, வறட்டுஇருமல் என்று பல பிரச்னைகளும் சேர்ந்தே வரும்.
வைட்டமின் – பி12 நம் தினசரி உணவில் இருந்தால், இந்தத் தொற்றுகளை எளிதாக சமாளிக்கலாம். மீன், இறைச்சி இவற்றில் வைட்டமின் – பி12 அதிக அளவில் உள்ளது.

காய்கறிகளில் பீட்ரூட், கீரை, கொண்டைக்கடலை, தயிர் இவற்றில் வைட்டமின் – பி12 அதிகம். சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்கள் தினசரி இவற்றை சேர்த்துக் கொள்வது அவசியம்.

தண்ணீர் சேர்த்துக் காய்ச்சியப் பாலை உறை சேர்த்தால், தயிரானபின், பாலில் உள்ள நீர், தயிரின் மேலே தனியாக இருக்கும். பொதுவாக இந்த நீரை வடித்துவிட்டு தயிரை மட்டும் உபயோகிப்போம். அப்படிச் செய்யாமல், அந்த நீரையும் சேர்த்தே பயன்படுத்துவதுதான் நல்லது. அதிக அளவில் வைட்டமின் பி12 உள்ள இந்தநீரை அப்படியே குடிக்கலாம் அல்லது தோசைமாவு, சப்பாத்தி மாவில் சேர்த்தும் சமைக்கலாம்.

கழுத்து, முதுகு வலி தீர

பலமணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை, அதிக தூரம் இரு சக்கர வாகன பயணம். விளைவு கழுத்து வலி, முதுகுவலி, உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள், முதுகுத்தண்டை தாக்கி, வீக்கத்தை ஏற்படுத்தும். அங்கிலோசிங் ஸ்பாண்டிலிடிஸ் கழுத்து, முதுகு வலிக்கு இன்னொரு காரணம்.
இந்த பிரச்னை பெண்களைவிட, ஆண்களையே அதிகம் பாதிக்கிறது.

முதுகின் கீழ்ப்பகுதியில் இரவு நேரத்திற்கு ஏற்படும் வலி காலையில் எழுந்தவுடன் வரும் வலி பிரச்னையின் அறிகுறிகள், அதீத வலியுடன், தசைகள் இறுக்கமாக இருக்கும். வழக்கமான வேலைகளை செய்ய ஆரம்பித்த அரைமணி நேரத்தில், தசைகள் தளர்ந்து வலி குறையும்.

ரத்தப் பரிசோதனை உட்பட சில மருத்துவ சோதனைகளை செய்து, பிரச்னை இருப்பதை உறுதி செய்யலாம். வலி நிவாரணியோடு, வாழக்கைமுறை மாற்றம், உடற்பயிற்சி என்று ஒருங்கிணைந்த மருத்துவ முறைகள் அவசியம்.

ஆழ்ந்த தூக்கத்திற்கு…

தூக்கமின்மை – பொதுவான பிரச்னையாக இருந்தாலும், தூங்கும் நேரத்திற்கும். விரும்பி சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு உள்ளது. ஒரு நாளில் ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால், வெள்ளை சர்க்கரை, மைதாவில் செய்யும் பாஸ்தா, பர்கர் ரொட்டி போன்ற துரித உணவுகளை அதிகம், சாப்பிட பிடிக்கும், காய்கறி, பழங்கள், புரதம் நிறைந்த பருப்பு வகைகளை சாப்பிட பிடிக்காது.

எட்டு மணி நேரம் ஆழ்ந்து தூங்கும்போது, நம் பழக்கத்தில் உள்ள சாதம் கூட்டு, பொரியல், இட்லி, தோசை
சாப்பிடுவதில் பிரச்னை இருக்காது. தூக்கமின்மை இருந்தால், பசியைத் தூண்டும் க்ரேலின் ஹார்மோன் அதிகம் சுரந்து, துரித உணவுகள் சாப்பிடும் உணர்வை அதிகரிக்கும். இதன் தொடர்ச்சியாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி, ஆழ்ந்த தூக்கம் இல்லாமல், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை தூக்கம் கலையும்.

அதேநேரம், சமச்சீரான உணவு, சாப்பிட்டால், ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். ஆழ்ந்த இடைவெளி இல்லாத, எட்டு மணி நேர தூக்கத்திற்கு பிரச்னை வராது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் போதுமான அளவு தூக்கம். பெறுவது முக்கியம். தூக்கமின்மை பிரச்னையை எதிர்கொண்டால் வளர்சிதை மாற்றம் மற்றும் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும்.

உடல் எடையை குறைக்க…

உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும். விளம்பரங்களைப் பார்த்து, ஒரே மாதத்தில் 5,10 கிலோ குறைக்க முயற்சிப்பது மார்க்கெட்டில் கிடைக்கும் கண்ட கண்ட புரத பானங்களை குடிப்பது தவறு. தேவைக்கு அதிகமாக சாப்பிடும் புரதம், பல உடல் பிரச்னைகளுக்கு வழி செய்யும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், முதலில் தவிர்ப்பது கார்போ ஹைட்ரோ உணவுகளைதான். இது முற்றிலும் தவறானது. கார்போ ஹைட்ரேட்டின் தினப்படி தேவை குறைந்துவிட்டால், முழு சக்தியோடு வேலை செய்ய முடியாது. சீக்கிரமே களைப்பாகி, எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்போம். குண்டாக இருக்கிறோம். எடையைக் குறைக்க பிரத்யேக வழிகளை பின்பற்றுகிறோம் என்று தேவையற்றதை செய்யாமல், அயர்ச்சியை தராத வகையில் டயட், உடற்பயிற்சி வழிமுறைகள் இருக்க வேண்டும். அதற்கு நிபுணரின் அறிவுரை முக்கியம்.

உணவு நஞ்சாவதை தடுக்க

பலரும் ஃபுட் பாய்சன் எனப்படும் உணவு நஞ்சாதலால் அவ்வப்போது அவதிப்படுகிறார்கள். பாக்டீரியாக்கள் எளிதில் உருவாகி பரவும் காலம் என்பதால் கோடையில்தான் அதிகளவு ஃபுட்பாய்சன் ஏற்படுகிறது.

உணவுப் பொருட்களை வைத்திருப்பதிலும், சமைப்பதிலும் சுத்தம், சுகாதாரத்தைப் பராமரித்தால் ஃபுட்பாய்சனை தவிர்த்து விடலாம். உதாரணமாக, ஃப்ரிட்ஜை நாம் சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அதிலுள்ள உணவுப் பொருட்கள் காய்கறிகளில் நோயை உண்டாக்கும் கிருமிகள் பரவி, அவற்றில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விடும்.

ஃப்ரிட்ஜ் மற்றும் சமையலறை மூலமாக பாக்டீரியாக்கள் பரவுவதைத் தவிர்க்க சில வழிமுறைகளைப்
பின்பற்றுவது கட்டாயமாகும். குறிப்பாக, கோடைக்காலத்தில் துரித உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும். அதிக வெப்பத்தில் பாக்டீரியாக் களானது வேகமாகப் பரவும்.

தகுந்த சுத்தப்படுத்தும் திரவம் மற்றும் தண்ணீரை உபயோகப்படுத்தி வாரம் ஒருமுறை ஃப்ரிட்ஜை துடைப்பது  அவசியம். சாப்பிடும் முன்பும், சமைக்கும் முன்பும், காய்கறிகள், பழங்களை நல்ல தண்ணீரில் நன்கு கழுவி உபயோகிக்க வேண்டும். சமையலறையில் பயன்படுத்தும் துணிகளை அவ்வப்போது துவைக்க வேண்டும். அதன் மூலம் பூஞ்சைகள், கிருமிகள் உண்டாவதைத் தடுக்கலாம்.
இறைச்சி போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கும்போது கவரில் போட்டு ஃப்ரிட்ஜின் அடிப்பகுதியில் வைப்பதன் மூலம் கிருமிகள் பரவாது, இறைச்சியுடன் மற்ற உணவுகளையும், காய்கறிகளையும்
வைக்கக் கூடாது.

ஃப்ரிட்ஜுக்குள் சரியான குளிர் நிலையைப் பராமரிப்பதால் காய்கறிகள் மற்றும் பழங்கள் புத்தம் புது பொலிவுடன் இருக்கும். காய்கறிகள், இறைச்சி ஆகியவற்றை வெட்டுவதற்கு தனித்தனிப் பலகைகளை உபயோகிக்க வேண்டும். இறைச்சியை நன்கு கழுவியும் சுத்தப்படுத்தியும் பின்பே பயன்படுத்த
வேண்டும். அளவுக்கு அதிகமான பொருட்களை ஃப்ரிட்ஜுக்குள் திணித்து வைப்பதால் காற்றோட்டமின்றி கிருமிகள் எளிதான உருவாகும். பொருட்கள் காலாவதியாகும் தேதியை கவனித்து பயன்படுத்த
வேண்டும்.

முட்டைகள் உடைந்து விடாமல் பத்திரமாக வைக்க வேண்டும். இறைச்சி, முட்டை, பால் மற்றும் உணவுப் பொருட்களை நன்கு சமைத்து உண்பது அவசியம். ஆக, சமையலிலும், சாப்பிடுவதிலும் கவனத்தோடு செயல்பட்டால் ஃபுட் பாய்சன் பிரச்னையில் இருந்து தப்பித்து விடலாம்.

தொகுப்பு:- பாலசர்மா