×

மனைவிகளை கொன்ற வழக்கில் முதியவர் உள்பட 2 பேருக்கு ஆயுள் தண்டனை: திண்டுக்கல் கோர்ட் தீர்ப்பு

 

திண்டுக்கல், ஜூலை 1: கொடைக்கானல் தாலுகா மன்னவனூரை சேர்ந்தவர் முருகன் (64). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கருப்பாயி (50). இந்த தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கருப்பாயி கோபித்து கொண்டு ரெட்டியார்சத்திரம் சுக்காம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த ஏப்.6ம் தேதி முருகன் தனது மனைவியை சந்தித்து, தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி தெரிவித்துள்ளார். இதற்கு கருப்பாயி மறுத்ததால் ஆத்திரமடைந்த முருகன், அரிவாளால் கருப்பாயியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கருப்பாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி வாதாடினார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார். இதில் முருகனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். *திண்டுக்கல் அருகேயுள்ள இரெண்டலப்பாறையை சேர்ந்தவர் மிஸ்பா ஐசக் நியூட்டன் (42). இவரது மனைவி மெசியா (25). மிஸ்பா ஐசக் நியூட்டன் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ல் விடுமுறையில் அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

அப்போது தம்பதியருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மிஸ்பா ஐசக் நியூட்டன், மெசியாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து ஐசக் நியூட்டனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி வாதாடினார். வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி கணேசன் (பொ) தீர்ப்பு வழங்கினார். இதில் மிஸ்பா ஐசக் நியூட்டனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags : Dindigul ,Murugan ,Mannavanur, Kodaikanal taluka ,Karupai ,Rediyarshatram ,Sukambatti… ,
× RELATED கரூர் பகுதியில் கண்களை பதம்பார்க்கும் காற்று