×

கடவூர் அருகே சாய்ந்த மின்கம்பத்தால் மக்கள் அச்சம்

 

கடவூர், ஜுன் 30: கடவூர் அருகே பாலவிடுதி முள்ளிப்பாடி பிரதான சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கீழே சாயும் நிலையில் உள்ள மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கடவூர் அருகே முள்ளிப்பாடி ஊராட்சி முள்ளிப்பாடி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதேபோல் இந்த பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள் அமைந்துள்ளது. அந்த பகுதி பொதுமக்களுக்கும், விவசாய கிணறுகளுக்கும் பாலவிடுதியில் உள்ள மின்வாரிய அலுலகத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதேபோல் பாலவிடுதியில் இருந்து வருகின்ற உயர்மின் அழுத்த மின்சாரத்தை முள்ளிப்பாடி பகுதிகளில் உள்ள மின்மாற்றி வாயிலாக முள்ளிப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் குடியிருப்புகளுக்கும், விவசாய பயன்பாடுகளுக்கும் என பல்வேறு தேவைகளை பொதுமக்களும் விவசாயிகளும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் அதிகமான விவசாய கிணறுகள் மற்றும் குடியிருப்புகள் அமைந்து உள்ளதால் போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் முள்ளிப்பாடி சுற்றுவட்டார பகுதிகளுக்கு கூடுதல் மின்சாரம் மற்றும் மும்முனை மின்சாரம் இணைப்புகள் வழங்கும் நோக்கில் அனைத்து பகுதிகளுக்கும் புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. இதேபோல் முள்ளிப்பாடியில் இருந்து பாலவிடுதி செல்லும் பிரதான சாலையில் புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு மின்கம்பிகள் இணைக்கும் பணிகள் நடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முள்ளிப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் முள்ளிப்பாடியில் இருந்து பாலவிடுதி செல்லும் பிரதான சாலையில் நடப்பட்டு உள்ள புதிய மின்கம்பங்கள் ஆங்காங்கே கீழே சாயும் நிலையில் உள்ளது.

பாலவிடுதி செல்லும் பிரதான சாலையில் நடப்பட்டு உள்ள மின்கம்பங்களுக்கு தரமில்லாத கான்கிரீட் அமைக்கப்பட்டு உள்ளதாலும், சில மின் கம்பங்களுக்கு கான்கிரீட் அமைக்காமல் உள்ளதாலும் பலத்த காற்று மற்றும் பலத்த மழைக்கு மின் கம்பங்கள் கீழே சாயும் நிலை உள்ளதாக கூறுகின்றனர். இதேபோல் முள்ளிப்பாடி-பாலவிடுதி பிரதான சாலையில் நடப்பட்டு உள்ள மின்கம் ஒன்று பல நாட்களாக கீழே சாயும் நிலையில் இருப்பதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து முள்ளிப்பாடி-பாலவிடுதி பிரதான சாலையில் கீழே சாயும் நிலையில் உள்ள மின் கம்பத்தை சரி செய்ய வேண்டும் மற்றும் நடப்பட்டு உள்ள அனைத்து மின் கம்பங்களுக்கும் தரமான கான்கிரீட் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த உள்ளனர்.

Tags : Kadavur ,Palaviduthi Mullipadi ,Mullipadi Panchayat ,Mullipadi ,
× RELATED கரூர் மூலக்காட்டனூர் பிரிவில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்