×

மக்கள் குறைதீர் கூட்டம்:  ரூ.48,912 மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

 

கரூர், ஜூன் 30: மக்கள் குறைதீர் கூட்டம் கரூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெறறது. மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ் தலைமை வகித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன்கள், பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 529 மனுக்கள் வரப்பெற்றன. மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தின் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 33 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிக்கு ரூ.48,912 மதிப்பீட்டில் செயற்கை கை, காதொலி கருவி, பார்வையற்றோருக்கான மடக்கு குச்சி மற்றும் கருப்பு கண்ணாடி மற்றும் ஊன்றுகோல் போன்ற உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் சக்தியபாலகங்காதரன், மாவட்ட ஆதிதராவிட நல அலுவலர் பிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர். சிவக்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Karur ,Redressal ,Karur Collectorate ,District Revenue Officer ,Vimalraj ,
× RELATED கரூர் மூலக்காட்டனூர் பிரிவில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்