×

நெல்லையப்பர் கோயிலில் நாளை மறுநாள் ஆனி திருவிழா தேரோட்டம்: சுவாமி தேரில் அலங்கார பதாகைகள் அமைப்பு

 

நெல்லை, ஜூன் 26: நெல்லை டவுனில் வரலாற்று பிரசித்தி பெற்ற சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த 20ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 28ம்தேதி தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேரும் எடையளவில் முதல் தேர் என்ற பெருமையுடைய சுவாமி நெல்லையப்பர் தேர், காந்திமதிஅம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்பட 5 தேர்களும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற உள்ளது.

தேரோட்டத்திற்கு ஒரு நாளே உள்ள நிலையில் சுவாமி நெல்லையப்பர் தேரில் சாரம் அமைத்து 5 அடுக்கு தட்டுகள் பொருத்தப்பட்டு அலங்கார பதாகைகள், தொடர்ந்து பிரம்மா, 4 குதிரைகள், யாழிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தேர்களுக்கு சாரம் அமைத்து தட்டுகள் பொருத்தும் பணி முடிந்து தேர் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேரோட்டத்துக்கு முந்தைய நாளில் வாழை தோரணம், பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டத்துக்காக தயார்படுத்தப்படும். இதற்காக ரதவீதிகளில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தம் அறிவிப்பு
நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை காணவரும் பக்தர்கள் கொண்டு வரும் இரு சக்கரம், மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளி வளாக மைதானத்தில் பக்தர்கள் வரும் கார்களை நிறுத்தவும், இரு சக்கர வாகனங்கள் டவுன் ஆர்ச் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் நிறுத்த வேண்டும். பின்னர் அங்கிருந்து நடந்து சென்று தேரோட்டத்தை காணவும் பக்தர்களுக்கு மாநகர போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

சாலைகள் சீரமைப்பு
தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை டவுன் பகுதியில் சாலை பேஜ் ஓர்க் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் நெல்லை டவுன் ரதவீதிகளில் பழுதான, சிறிய பள்ளங்கள் உள்ள சாலைகளும் பேஜ் ஓர்க் செய்யப்பட்டுள்ளது. ரதவீதிகளை தூய்மை படுத்தும் பணியும் நடந்தது. தேரோட்டத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர் திரும்பும் ரதவீதிகளின் நான்கு பகுதிகளிலும் முறையாக பராமரிப்பு பணி செய்யப்பட்டது. ரதவீதிகளில் 5

ஆம்புலன்ஸ் நிறுத்தம்
தேரோட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் அவசர பாதுகாப்பு வசதிக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 5 எண்ணம் ரத வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் மூன்று வாகனங்களில் `அட்வான்ஸ் பேசிக் சப்போர்ட்” இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் பேசிக் சப்போர்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

11 இடங்களில் தற்காலிக கழிவறை வசதிகள்
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் நாளை மறுநாள் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. வழக்கமாக தேரோட்டத்தை காணவரும் பக்தர்களை விட விடுமுறை தினம் என்பதால் நெல்லை மாவட்டம் தவிற பிற மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் பக்தர்கள் வருகையின் போது அத்தியாவசியமாக தேவைப்படும் 11 தற்காலிக கழிவறை மாநகராட்சி சார்பில் அமைக்கப்படுள்ளன.

சுவாமி சன்னதி அருகே, சண்டிகேஷ்வரர் தெரு, தெற்குமவுண்ட்ரோடு (ரயில்வே பீடர் சாலை), மேலரதவீதி (மானூர் வடக்கு பஸ்நிறுத்தம்) மேலரதவீதி (கூலக்கடை பஜார்), தெற்கு மாடவீதி (போஸ்மார்க்கெட்), தொண்டர் சன்னதி, நயினார்குளம்ரோடு (போத்தீஸ் பின்புறம்) மேலரதவீதி (லாலா கார்னர்), தெற்கு மவுண்ட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கழிவறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Ani festival procession ,Nellaiappar temple ,Swami ,Nellai ,Ani Perundru festival ,Swami Nellaiappar ,Gandhimati Ambal temple ,Tamil Nadu ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7.49...