×

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒன்றிய அரசு பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

சென்னை: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் ஒன்றிய அரசின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதை மறுபரிசீலனை செய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தை, 2 சதவீதம் அடிப்படை பங்குகள் மற்றும் 1 சதவீதம் கூடுதல் பங்குகள் ஒதுக்கீட்டு விருப்பம் உள்ளிட்ட 3 சதவீதம் வரையிலான ‘விற்பனைக்கான சலுகை’ மூலம் விற்பனை செய்வதற்கு இந்திய அரசு எடுத்துள்ள முடிவு குறித்து தமிழ்நாடு அரசின் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைக்கும் எந்தவொரு முடிவையும், தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியாக ஆட்சேபிக்கிறது. என்.எல்.சி இந்தியா நிறுவனம் தனது தோற்றம், வளர்ச்சி மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகள் என அனைத்திலும், தமிழ்நாட்டுடன் இரண்டறக் கலந்திருப்பதால், இந்த விவகாரம் தமிழ்நாட்டிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் தலைமையகம் தமிழ்நாட்டின் நெய்வேலியில் அமைந்துள்ளது. இங்குதான் அதன் முதன்மையான பழுப்பு நிலக்கரி சுரங்க செயல்பாடுகளான சுரங்கம்-I, சுரங்கம்-Iஏ, சுரங்கம்-II மற்றும் அதன் முக்கிய நிலக்கரி சுரங்க முகப்பு சார்ந்த அனல் மின் நிலையங்களும் அமைந்துள்ளன. இந்த நிறுவனம், மாநில அரசு நிர்வாகத்தின் விரிவான வசதி வாய்ப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, மறுவாழ்வு நடவடிக்கைகள் மட்டுமல்லாது,

தமிழ்நாட்டு மக்களின் ஒத்துழைப்புடன், மாநில அரசு வாயிலாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனத்தில் மாநில அரசுக்கு நியாயமான மற்றும் நீடித்த உரிமை உள்ளது. மேலும், என்.எல்.சி இந்தியா நிறுவனம் என்பது வெறும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் மட்டுமல்லாமல், எரிசக்தி பாதுகாப்பு, கனிமவள மேம்பாடு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த தேசிய சொத்து என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

இந்திய அரசின் பங்குகளை மேலும் குறைப்பது, அது எவ்வளவு குறைவாக இருப்பினும், இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் பொது உடைமை தன்மைக்கு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். இத்தகைய நடவடிக்கை நிதி சார்ந்த அம்சங்களை கடந்து, மாநிலத்தின், மாநில மக்களின் நீண்டகால நலன்கள், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு ஆகியவற்றை பாதிப்பதாக அமையும்.

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் இந்திய அரசின் பங்குகள் மேலும் குறைக்கப்படக் கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறது. இத்தகைய பொதுத்துறை நிறுவனங்கள், குறிப்பாக பல தசாப்தங்களாக அவற்றைச் செயல்படுத்திவரும் மாநிலத்தின் தொடர்ச்சியான ஆதரவோடு நிறுவப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டவை என்பதால், இத்தகைய நிறுவனங்கள் தொடர்ந்து முழுமையாக அரசின் உரிமையிலும் கட்டுப்பாட்டிலும் மட்டுமே நீடிக்கவேண்டும் என்றும்,

இத்தகைய சூழலில், என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான தனது முடிவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசின் எண்ணங்களையும், கொள்கை ரீதியான ஆட்சேபனைகளையும் இந்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும் என்று தாம் உளப்பூர்வமாக நம்புகிறேன். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

Tags : Union government ,Neyveli Lignite Company ,Chief Minister ,Vijay ,Modi ,Chennai ,Prime Minister Narendra Modi ,Narendra Modi ,
× RELATED ரூ.127 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 300...