சென்னை: தமிழக உணவு பாதுகாப்புத்துறை வழிகாட்டுதலின்படி செயல்படும் உணவு கடைகளில் மட்டுமே புட் ரிவ்யூ செய்ய வேண்டும், என யூடியூபர்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகங்கள், குறிப்பாக யூடியூப் தளத்தில் உணவு விமர்சனம் செய்யும் போக்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சாதாரணமாக வீதிகளில் விற்கப்படும் உணவுகள் முதல் நட்சத்திர உணவகங்கள் வரை தேடிச் சென்று விமர்சனம் செய்யும் யூடியூபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதில், சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்களுக்கு கூட யூடியூபர்கள் பணம் பெற்றுக்கொண்டு உயர்வாக ரிவ்யூ செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும், தரமான உணவு விநியோகத்தை உறுதி செய்யும் பொருட்டும் உணவு பாதுகாப்புத் துறை ஒரு முக்கிய புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
அதன்படி, புட் ரிவ்யூ செய்வதற்கு முன்பாக கடையின் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் உள்ளதா, முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களா, என்பதை அறிந்து உணர்ந்து புட் ரிவ்யூ செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் கடையில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் முதல் உணவு தயாரிப்பவர்கள் முறையாக கையுறை மற்றும் தலையுறை உள்ளிட்டவை அணிந்து பணியாற்றுகிறார்களா, உணவு தயாரிக்கிறார்களா என்பதையும் அறிய வேண்டும்,
தொடர்ந்து கடையில் சுகாதாரமாகவும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் அறிய வேண்டும். உணவு கடையில் வழங்கக்கூடிய தண்ணீர் உணவு உள்ளிட்டவை தரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதா, உள்ளிட்டவை அறிய வேண்டும். கடையின் வெளித்தோற்றத்தையும், உள்தோற்றத்தையும் மட்டுமே காட்சிப்படுத்தி புட் ரிவ்யூ எடுக்க வேண்டாம் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை உணவு பாதுகாப்புத்துறை வழங்கி உள்ளது.
