திருப்பூர், மார்ச் 8: திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலைசெய்து கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் மேலப்புலியூரை சேர்ந்தவர் ராமஜெயம் (63). இவர் திருப்பூரை அடுத்த திருமுருகன் பூண்டி அருகே அம்மாபாளையம் கோபால்டு மில் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம் போல வேலைக்கு போகாமல் வீட்டிலிருந்த ராமஜெயத்தை அவருடைய மகன் சிவராஜ் கண்டித்ததாக தெரிகிறது.
அப்போது இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனையடைந்த ராமஜெயம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம்பக்கம் இருந்தவர்கள் திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.