துபாய்: துபாயில் மினிபஸ் – லாரி மோதிய விபத்தில் இந்திய தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் மேலும் 9 இந்தியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக துபாய் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தூதரக அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த இந்தியர்களைச் சந்தித்தனர். சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்குவதற்காக அவர்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர். துபாய் காவல்துறையின்படி, சாலையின் நடுவில் நின்றிருந்த லாரியின் மீது மினிபஸ் மோதியதில் ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லாரி சாலையின் நடுவில் திடீரென நின்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பேருந்து ஓட்டுநர், கவனக்குறைவாகவும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் இருந்ததால், லாரியின் பின்புறத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது என போக்குவரத்து பொதுத் துறையின் இயக்குநரான பிரிகேடியர் ஜுமா சலேம் பின் சுவைதான் தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். இதில் ஐந்து பேருக்கு பலத்த காயங்களும், நான்கு பேருக்கு மிதமான காயங்களுடனும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும், விபத்துக்கான சரியான காரணங்களைக் கண்டறிய, சம்பவ இடத்தை ஆய்வு செய்வதற்கும் துல்லியமான ஆதாரங்களைச் சேகரிப்பதற்கும் போக்குவரத்து விபத்து விசாரணைப் பிரிவின் நிபுணர்கள் அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு இந்திய துணை தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான சமூக வலைதள பதிவில்;
துபாயில் நிகழ்ந்த துயரமான சாலை விபத்தில் பல இந்தியத் தொழிலாளர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது.
எங்கள் அதிகாரிகள் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த இந்தியர்களைச் சந்தித்ததுடன், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்க உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்தக் கடினமான சூழலில், துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். என கூறப்பட்டுள்ளது.
