ஒட்டன்சத்திரம், ஜூன் 8: ஒட்டன்சத்திரத்தில் குடியிருப்பு பகுதிக்கு உயரழுத்த மின்கம்பிகள் இடமாற்றம் செய்யப்படுவதை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரியுள்ளனர்.
ஒட்டன்சத்திரத்திரம் கேகே நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
ஒட்டன்சத்திரத்தில் உள்ள கேகே நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வரும், தனிநபர் மற்றும் அவரது உறவினர் ஆகியோர் தங்கள் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக காலி மனையிடங்களை பிரித்து, விற்பனை செய்து வருகின்றனர். காலி மனைகளை விற்பனை செய்த பின்பு மீதமுள்ள இடத்தில், உயரக மின்கம்பிகள் செல்கிறது.
இவற்றை பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் தெருப்பகுதியில் மாற்றி அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் உயரழுத்த மின்சார வயரை காலியிடத்திலிருந்து குடியிருப்பு பகுதிகுள் மாற்றவேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். அவர்கள் விரும்புவதுபோல் மின் கம்பிகளை மாற்றி அமைத்தால் வீட்டின் மாடிகளில் இருந்து அவற்றை கையால் தொடும் நிலை ஏற்படும். ஏற்கனவே குறிஞ்சி நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது வீட்டு மாடியில் பணி செய்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் சென்ற உயரழுத்த மின் கம்பியில் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் மாட்டுச் சந்தை அருகே மின் கம்பி மீது மோதியதில் சந்தைக்கு வந்த வியாபாரி ஒருவர் உயிரிழந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விருப்பாச்சியில் உயர் அழுத்த மின்கம்பியால் 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் உயரழுத்த மின்கம்பிகளை இடமாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். கடந்த ஆண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட இப்பணியை, ரியல் எஸ்டேட் தொழிலுக்காக தனி நபருக்கு ஆதரவாக செயல்படும் மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளனர்.
