பட்டுக்கோட்டை, ஜூன் 6: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நாளான நேற்று பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளியில் சேர்ந்த புதிய மாணவர்களை நாதஸ்வரம், மேளம் முழங்க, பள்ளியின் வாயிலிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் தெட்சிணாமூர்த்தி தலைமையில், மாணவர்களை, ஆசிரியர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
பின்னர் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்கு வருகை தந்த பள்ளியில் பயிலும் 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்களுடன் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்றனர். புதிய மாணவர் சேர்க்கையை முன்னிட்டும், கோடை விடுமுறை முடிந்து பள்ளி நேற்று திறக்கப்பட்டதையொட்டியும் பள்ளி வளாகம் முழுவதும் வண்ண வண்ண கலர் பேப்பர்களாலும், பலூன்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
